பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 March 2019 9:30 PM GMT (Updated: 16 March 2019 9:30 PM GMT)

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போதே, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை டி.பி.சத்திரம் போலீசார் கடந்த 2009-ம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் தன்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, தன்ராஜூக்கு 7 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தன்ராஜ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.

விடுதலை

அப்போது மனுதாரர் சார்பில், ‘2009-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக கூறும் போலீசார், அதை நீதிமன்றத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதிதான் ஒப்படைத்துள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த கஞ்சா பொருளை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் போலீசார் தரப்பிடம் இல்லை. போதைப்பொருளை போலீசார் மாற்றியிருக்கலாம். மேலும், முதலில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா என்று எழுதிவிட்டு, அதை திருத்தி 1 கிலோ 150 கிராம் என்று மாற்றி எழுதப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், போலீசார் கூறும் காரணங்களை கீழ் கோர்ட்டு நீதிபதி எந்திரத்தனமாக ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். தன்ராஜை விடுதலை செய்கிறேன்‘ என்று தீர்ப்பு அளித்தார்.

நிபந்தனைகள்

மேலும் அந்த தீர்ப்பில், பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை கோர்ட்டில் எப்போது ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ‘போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். அதாவது, கைதானவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போதே, போதைப்பொருட்களையும் கோர்ட்டில் ஒப்படைத்து விடவேண்டும். அல்லது 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த போதைப்பொருளின் எடையை மாஜிஸ்திரேட்டு சரி பார்க்கவேண்டும். இதற்காக நீதிமன்றங்களுக்கு தேவையான தராசுகளை தமிழக அரசு வழங்கவேண்டும். அதன்பின்னர், அந்த போதைப்பொருட்களை, உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்‘ என்பது உள்பட பல நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார்.

Next Story