காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா
x
தினத்தந்தி 16 March 2019 10:19 PM GMT (Updated: 16 March 2019 10:19 PM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் திருவிழாவாக நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக ஏகாம்பரநாதர் உற்சவர் ஏலவார்குழலியுடன் அம்பாளுடன்் 63 நாயன்மார்களுக்கு கோவிலில் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பிறகு 63 நாயன்மார்கள் மலர் அலங்காரத்தில் 13 பல்லக்கில் எழுந்தருளினார்கள். பிறகு மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர்கள் தீபாராதனை காட்டினர். அப்போது கோவிலில் திரண்டு இருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

பிறகு 63 நாயன்மார்கள் 4 ராஜவீதிகளில் வீதியுலா வந்தனர். 4 ராஜவீதிகளில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மனமுருகி 63 நாயன்மார்களை தரிசித்தனர்.

அன்னதானம்

காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் 4 ராஜவீதி சாலைகளில் லாரிகள் மூலம் தண்ணீரை ஊற்றி வெப்பத்தை தணித்தனர்.

கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 63 நாயன்மார்கள் வீதியுலாவையொட்டி, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story