திருப்பூரில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு


திருப்பூரில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 16 March 2019 9:30 PM GMT (Updated: 16 March 2019 10:34 PM GMT)

திருப்பூரில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகர பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ராணுவத்தினர் நேற்று முன்தினம் திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டனர். துணை கமிஷனர் மேத்யூ தாமஸ் தலைமையில் 78 துணை ராணுவத்தினர் அடங்கிய ஒரு கம்பெனி திருப்பூர் வந்து காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் முகாமில் இருந்து ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையிடம் இவர்கள் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி பறக்கும் படை மற்றும் மாநகர போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூர் டவுன்ஹால் முன்பு இருந்து துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. அவர்களுடன் திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரும் அணிவகுத்து சென்றனர்.

துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய படியும், ஆயுதப்படை போலீசார் லத்திகளை ஏந்தியபடியும் வரிசையாக நடந்து சென்ற னர். 150 பேர் ரோட்டில் வரிசையாக நடந்து சென்றதை மக்கள் வேடிக்கை பார்த்தனர். குமரன் ரோடு வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடந்து முடிந்தது. 

Next Story