இந்திய-திபெத் எல்லையில் இருந்து நெல்லைக்கு துணை ராணுவம் வருகை தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்


இந்திய-திபெத் எல்லையில் இருந்து நெல்லைக்கு துணை ராணுவம் வருகை தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 March 2019 10:00 PM GMT (Updated: 16 March 2019 10:34 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இந்திய-திபெத் எல்லையில் இருந்து நெல்லைக்கு துணை ராணுவம் நேற்று வந்தது.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் பதற்றமான பகுதிகள் பட்டியல் தயாரிக் கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரும் பயன்படுத்தப் படுகிறார்கள்.

இதற்காக தேர்தல் கமிஷனிடம் துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி, துணை ராணுவத்தினர் 10 படைப்பிரிவினர் நேற்று தமிழகத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 83 வீரர்கள் உதவி கமாண்டிங் அதிகாரி அஜய் ஆனந்த் தலைமையில் ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். அவர்கள் மானாமதுரை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து போலீஸ் பஸ், வேன்களில் நேற்று காலை நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் துணை ராணுவ படையினர் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் நவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரிபார்த்து எடுத்து வைத்தனர். துணை ராணுவ வீரர்கள் நெல்லை மாநகர பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து, கண்காணிப்பு பணி மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்பு உள்ளிட்ட பணி களை மேற்கொள்கின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நெல்லை மாவட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவத்தினரும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்த லின்போது 13 கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே, இந்த தேர்தலுக்கு மேலும் 10-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் வருவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளன. 

Next Story