நாங்குநேரி அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை


நாங்குநேரி அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2019 9:45 PM GMT (Updated: 16 March 2019 10:34 PM GMT)

நாங்குநேரி அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. அவருடைய மகள் இசக்கியம்மாள் (வயது 17). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி சென்று மேற்படிப்பு படிக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவரது பெற்றோர் வறுமையின் காரணமாக படிக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இசக்கியம்மாள், நேற்று காலை வீட்டின் அருகே அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு நடந்து கொண்டு இருக்கும் நிலையில் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story