வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் பதுக்கலா? பார்சல் அலுவலகத்தில் கண்காணிப்பு குழுவினர் சோதனை


வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் பதுக்கலா? பார்சல் அலுவலகத்தில் கண்காணிப்பு குழுவினர் சோதனை
x
தினத்தந்தி 18 March 2019 10:45 PM GMT (Updated: 18 March 2019 3:42 PM GMT)

வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் பதுக்கலா? என பார்சல் அலுவலகத்தில் கண்காணிப்பு குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந் தேதி நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவை தவிர மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? விடுதிகள், திருமண மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் 24 மணிநேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.


தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிலையான கண்காணிப்புக்குழு அலுவலரும், தனி தாசில்தாருமான திருநாசுஜாதா தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஜான்கென்னடி, ஏட்டு கலைச்செல்வன் ஆகியோர் தஞ்சை ரெயிலடி, மானம்புச்சாவடி, கரந்தை, பள்ளியக்கிரகாரம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமலும், கொடி கம்பங்களில் கட்சி கொடிகள் அகற்றப்படாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இவை குறித்து மாநகராட்சி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுவர் விளம்பரங்களை அழிக்கவும், கொடிகளை அகற்றவும் அறிவுறுத்தினர்.


மேலும் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என தஞ்சை வடக்குவாசலில் உள்ள பார்சல் அலுவலகத்தில் நிலையான கண்காணிப்புக்குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெளியூரில் இருந்து வந்த பார்சல்கள், தஞ்சையில் இருந்து வெளியூருக்கு செல்லக்கூடிய பார்சல்களை சோதனை செய்தனர்.

அப்போது 3 அட்டை பெட்டிகளில் 18 ஹாட்பாக்ஸ் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த பார்சல் எங்கிருந்து வந்தது? யாருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இருந்ததால் ஹாட்பாக்சை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. இந்த சோதனை 2 மணிநேரம் நீடித்தது. பின்னர் இந்த குழுவினர், பள்ளியக்கிரகாரம், பழைய மாரியம்மன்கோவில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story