நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல்


நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 2:56 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் கூறினார்.

நாகர்கோவில்,

கடந்த 10–ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தலைமையிலான அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதையடுத்து அரசுத்துறை கட்டிடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சிகளின் சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாகர்கோவில் மாநகரில் பொது இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் அந்த கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்த பீடங்களும் அகற்றப்பட்டு வருகிறது.


இதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நாகர்கோவில் மாநகரை தவிர தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் தேர்தல் விதிகள் என்ற பெயரில் கொடிக்கம்பங்கள் அறுத்து அகற்றப்படுவதும், கொடிக்கம்பங்களின் பீடங்கள் இடித்து அகற்றப்படுவதும் நடைபெறவில்லை. எனவே கொடிகம்பங்களை அறுத்து எடுக்கவும், பீடங்களை இடிக்கவும் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.

இந்தநிலையில் நேற்றும் நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம், கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றும் பணி நடந்தது. இதனால் அரசியல் கட்சியினரிடையே மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சரவணக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 24 மணி நேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலக பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலான விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். 48 மணி நேரத்தில் பொது இடங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். 72 மணி நேரத்தில் மாநகரம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும்.

அதன்படிதான் நாங்கள் மாநகரில் உள்ள கொடிக்கம்பங்களை அறுத்து அகற்றி வருகிறோம். கட்சிகளின் கொடி வர்ணம் மற்றும் சின்னங்கள் வெளிப்படக்கூடாது என்பது தேர்தல் விதிமுறை ஆகும். கொடிக்கம்பங்களின் பீடப்பகுதி பல இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துக்கு இடையூறாகவும், அதில் கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிக்கொடி வர்ணங்கள் வெளிப்படும் விதமாக அமைக்கப்பட்டு உள்ளன.


தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பொருட்டு அரசியல் கட்சி கொடிக்கம்பங்களின் பீடப்பகுதிகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் அரசியல் கட்சியினர் பீடப்பகுதியை துணியால் மூடினாலும் அரைகுறையாக மூடியுள்ளனர். இதனால் அவர்களின் கட்சிக்கொடி வர்ணம் வெளிப்படும் விதத்தில் இருந்ததால் எவ்வத பாகுபாடும் இன்றி அவைகள் அகற்றப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகர பகுதியில் நேற்று வரை 300–க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

பல இடங்களில் கொடிக்கம்பங்களின் பீடப்பகுதிகளை வைத்து பலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். சிலர் இதை பாதுகாப்பாக வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு வியாபாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சிறு, சிறு கட்டுமானங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story