பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமண தம்பதி விஷம்குடித்து தற்கொலை குழந்தைக்கு தீவிர சிகிச்சை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமண தம்பதி விஷம்குடித்து தற்கொலை குழந்தைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:08 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் கனிஷ்கா (1½).

சரவணன் மெனசியில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். இந்தநிலையில் கனிஷ்காவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று காண்பித்தனர். அதன்பின்னர் கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று ஏ.பள்ளிப்பட்டியில் சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதற்காக ஏ.பள்ளிப்பட்டிக்கு சரவணனின் உறவினர்கள் சென்று விட்டனர். நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அங்கிருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தை கனிஷ்காவை அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story