திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

திண்டுக்கல்லில் வாலிபரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் சோலைஹால் சாலை நெட்டுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 25). இவர் பி.சி.ஏ. படித்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், சூரியபிரகாஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக சூரியபிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே கொலையான சூரியபிரகாசின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொலையாளிகளை பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுத்து விட்டனர்.

மேலும் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல்- திருச்சி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் மறியலை கைவிட்டு, சூரியபிரகாசின் உடலை வாங்கி சென்றனர்.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படையை துரிதப்படுத்தி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். இந்த நிலையில் தனிப்படை போலீசாரின் விசாரணையில், சூரியபிரகாஷை சோலைஹால் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), மாலைப்பட்டியை சேர்ந்த ஜெகன் (22) கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கொலையான சூரியபிரகாஷ் மற்றும் அஜித்குமாருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், சூரியபிரகாஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று சூரியபிரகாஷ் ஆர்.எஸ்.சாலைக்கு சென்றுள்ளார். அதை பார்த்த அஜித்குமார் தனது நண்பர் ஜெகனுடன் சென்று சூரியபிரகாஷை கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர். 

Next Story