ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 7:23 PM GMT)

ஓசூரில் நடந்த சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ஓசூர்,

ஓசூரில் நடைபெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டையில் மலை மீது பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி பால் கம்பம் நடும் நிகழ்ச்சி, தேர் கட்டும் பணிகளுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி இரவு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு தேர்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் உற்சவரை வைத்து ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். முன்னதாக சிறிய தேரில் விநாயகர் இழுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை சாமிகளின் தேர்கள் இழுத்து செல்லப்பட்டன. அப்போது பக்தர்கள் தேரின் மீது வாழைப்பழம், உப்பு, மிளகு உள்ளிட்டவற்றை எறிந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், தொழில் அதிபர்கள் முத்துகிருஷ்ணன், ஆனந்தய்யா, லட்சுமிபதி, பாபு, சொக்கலிங்கம், சுப்பிரமணியன், ராகவேந்திரா, மஞ்சுநாத், ராஜி, கண்ணன், மன்சூர், முன்னாள் நகர்மன்ற தலைவர் சத்யா, மலைக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராசன், பா.ஜனதா இளைஞரணி மாநிலசெயலாளர் நாகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், நந்தகுமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி துணைத்தலைவர் அசோக்குமார், ஓசூர் யாதவ பண்பாட்டு கழக துணைத்தலைவர் மோகன்குமார் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, தேர்பேட்டை மற்றும் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த தேர்த்திருவிழா காரணமாக ஓசூர் நகரமே விழாக்கோலம் போல காட்சியளித்தது.

இன்று (வியாழக்கிழமை) இரவு ஓசூர் தேர்பேட்டையில், வாணவேடிக்கைகளுடன் ராவண உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவமும், வருகிற 27-ந் தேதி வரை பல்லக்கு உற்சவங்களும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம், உதவி ஆணையர் நித்யா மற்றும் கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி தலைவர் கே.ஏ.மனோகரன் மற்றும் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


Next Story