செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
![செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்](https://img.dailythanthi.com/Articles/2019/Mar/201903210306230904_Near-the-redhillsThe-girl-is-burning-commits-suicide_SECVPF.gif)
செங்குன்றம் அருகே, பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 49). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஸ்டெல்லா(45). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுவந்தது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் சுப்பையா குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் மனம் உடைந்த ஸ்டெல்லா, வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா, தனது மனைவியின் உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றார். அதில் அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரது உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இதில் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா, பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சுப்பையாவை மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பலியான ஸ்டெல்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.