கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு


கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 21 March 2019 10:15 PM GMT (Updated: 21 March 2019 8:19 PM GMT)

பூதப்பாண்டி பகுதி கல்லூரியில் எழுந்துள்ள பாலியல் புகாரின் பேரில் கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பேராசிரியை தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் மற்றும் ஊழியர்கள் பேராசிரியையின் உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் 2 பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் 2 பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story