ரெயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடு: தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


ரெயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடு: தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2019 10:00 PM GMT (Updated: 22 March 2019 6:23 PM GMT)

ரெயில்வே பணியாளர் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தக்கோரி ஆவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி,

ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தெற்கு ரெயில்வேயில் குரூப் டி பிரிவில் சிக்னல், டிராக்மேன், கலாசி, மெக்கானிக், எலக்ட்ரிக்கல், பிளம்பர் போன்ற பணிகளுக்கான எழுத்துத்தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு உடற்தகுதி தேர்வு இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆவடியில் நடைபெற்ற இந்த உடற்தகுதி தேர்வில் வடமாநிலத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து கலந்துகொண்டனர்.

ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் வீதம் 3 நாட்களுக்கு இந்த உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதில் 1,200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தூரத்துக்கு 35 கிலோ மண் மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலுமே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடஇந்தியர்கள் புகுத்தப்படுகிறார்கள். இது அரசியல், பொருளியல், பண்பாட்டு நிலைகளில் தமிழர்களுக்கு எதிரான மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இதற்கு முடிவு கட்ட தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகள், மத்திய அரசு நிறுவன பணிகளில் தமிழர்களுக்கு பணி வழங்க வேண்டும். ரெயில்வே பணியாளர் தேர்வில் முறைகேடாக தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு வருகிறார்கள். எனவே மொத்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக தேர்வான வட இந்தியர்கள் பணியில் சேரக்கூடாது.

ரெயில்வே பணியாளர் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story