பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் இதுவரை 2 பேர் மட்டுமே மனு


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் இதுவரை 2 பேர் மட்டுமே மனு
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 8:54 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடமும், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான விஸ்வநாதனிடமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளான கடந்த 19-ந்தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. 2-வது நாளான கடந்த 20-ந்தேதி எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ராஜசேகரன் என்பவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் பெரம்பலூர் தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கட்சியினருடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வேட்பாளருடன் வந்திருந்தவர்கள் விவசாயிகளின் அடையாளமாக பச்சை நிற வேட்டியை உடுத்தி கொண்டும், பச்சை நிற துண்டை தலையில் கட்டிக்கொண்டும் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உடன் செல்ல அனுமதித்தனர். பின்னர் வேட்பாளர் சாந்தி தனது கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் உள்பட 4 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா திருமங்கலத்தை சேர்ந்த சாந்திக்கு (வயது 36) திருமணமாகி கனகசபை என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எம்.ஏ. பி.எட் படித்துள்ள சாந்தி தற்போது விவசாயம் செய்து வருகிறார். கட்சியில் லால்குடி சட்டமன்ற தொகுதியின் மகளிர் பாசறையின் செயலாளராக பதவி வகித்து வருகிறார். சாந்தி தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை மொத்தம் 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அன்றைய தினம் தான் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய ஜனநாய கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனால் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படும். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன் வருகிற 26-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடம், அவரது அறையில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அறை அருகே ஒரு நபர் காலை முதல் மதியம் வரை சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட உளவுப்பிரிவு போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரை சேர்ந்த சுரேஷ் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உறவினரை வரவழைத்து, சுரேசை ஒப்படைத்தனர்.

Next Story