நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு


நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 9:27 PM GMT)

பல்லடம் அருகே நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வீடியோ அழைப்பின் போது மனைவி முகத்தில் கலர் பொடி இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

பல்லடம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் சகானி (வயது 30). இவர் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹோலிப்பண்டிகை என்பதால் உமேஷ் சகானி தனது நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகையை கொண்டாடினார். அப்போது நண்பர்களுக்கு கலர் பொடியை பூசினார். அதுபோல் இவருடைய நண்பர்களும் இவருக்கு கலர் பொடியை பூசினர். பின்னர் உற்சாக மிகுதியில் அனைவரும் மது அருந்தினார்கள். பின்னர் பீகாரில் இருக்கும் மனைவி ரேணுகா தேவியிடம் (25) வீடியோ அழைப்பு மூலம் உமேஷ் சகானி பேசினார். அப்போது ரேணுகா தேவியின் முகத்தில் கலர்பொடி தூவப்பட்டு இருப்பதை வீடியோ மூலம் பார்த்தார்.

இதையடுத்து அந்த கலர்பொடியை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமேஷ் சகானி, இந்த பொடியை உன் முகத்தில் பூசியது யார்? என்று கேட்டுள்ளார். அப்போது அவர் பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ் சகானி, தாலி கட்டிய கணவன் நீண்ட தொலைவில் தனியாக இருக்கும்போது உன் முகத்தில் கலர் பொடியை யாரோ ஒருவர் பூசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீடியோ அழைப்பை துண்டித்து விட்டு, உமேஷ் சகானி தூங்க சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு ரேணுகா தேவி தனது கணவன் உமேஷ் சகானியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் பலமுறை முயன்றும் முடியாததால், அவருடைய நண்பர்களின் செல்போனில் தொடர்பு கொண்ட ரேணுகா தேவி பேசி, நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உமேஷ் சகானி அறைக்கு சென்று பார்த்த நண்பர்கள், அங்கு உமேஷ் சகானி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உமேஷ் சகானியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி முகத்தில் கலர் பொடி இருப்பதை பார்த்த தொழிலாளி மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story