திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மனு தாக்கல்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 9:45 PM GMT (Updated: 22 March 2019 9:45 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

திருச்சி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை ஆகும். எனவே, 25, 26 ஆகிய தேதிகளில் மட்டுமே இனி வேட்பு மனுதாக்கல் செய்ய முடியும்.

இந்தநிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திருச்சி முத்தரசநல்லூர் வெள்ளார்தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.வினோத் (வயது 33) நேற்று பிற்பகல் திருச்சி மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.சிவராசுவிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதுபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளராக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம் விடுதியை சேர்ந்த பழ.ஆசைத்தம்பி வேட்பு மனுதாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனுதாக்கல் செய்ய சென்ற வேட்பாளர்கள் இருவரையும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், வரவேற்பு ஹால் ஆகிய இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். மேலும் வேட்பாளர்களுடன் முன்மொழிய சென்றவர்களும் சோதனை செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை விஜயகுமார். புகைப்பட கலைஞராக தொழில் செய்கிறார். வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்திற்கு இருப்பு உள்ளதாகவும், கையில் ரூ.1,000 மட்டுமே ரொக்கம் உள்ளதாகவும், தன் மீது நிலுவையில் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு ஒன்று உள்ளதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் மதிப்பில் கடனில் கார் ஒன்று வாங்கி இருப்பதாகவும் ஆக மொத்த சொத்து மதிப்பு ரூ.6 லட்சத்து 6 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் பழ.ஆசைத்தம்பி(47) அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் பதவியில் உள்ளார். பி.ஏ., பி.எட் படித்தவர். 1993-ம் ஆண்டு புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் வரலாற்றுத்துறை செயலாளராக இருந்தவர். புரட்சிகர இளைஞர் கழக முன்னாள் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்தவர். ஏற்கனவே, கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது 3-வது முறையாக களத்தில் உள்ளார். பழ.ஆசைத்தம்பியின் மனைவி ரேவதி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஏற்கனவே, சி.கருப்பையா, ஏ.சாதிக்பாட்சா, சதீஷ்குமார் ஆகிய 3 பேர் சுயேச்சைகளாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று பழ.ஆசைத்தம்பி, வி.வினோத் ஆகிய 2 வேட்பாளர்கள் என இதுவரை 5 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

Next Story