விளாத்திகுளம் தொகுதியில் “அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


விளாத்திகுளம் தொகுதியில் “அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

“விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று விளாத்திகுளம் அருகே அயன்கரிசல்குளத்தில் பிரசாரம் செய்தார். அவர் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் முதலாவது வாக்குச்சாவடியான அயன்கரிசல்குளத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் திறமையான வலிமை மிக்க பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். அவர் தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். அவரது ஆட்சி தொடர வேண்டும். ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி‘ என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

சிலரின் துரோகத்தால், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு உள்ளது. விளாத்திகுளம் தொகுதி எப்போதுமே அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. இங்கு நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் 8 முறை அ.தி.மு.க. வென்றுள்ளது. விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

கடந்த 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் கடம்பூர் ஜனார்த்தனன் போட்டியிட்டபோதே விளாத்திகுளம் தொகுதியில் தேர்தல் பணியாற்றினேன். பின்னர் அவர் 1998-ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, இங்கு தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றினேன். இங்கு பல கட்சியினர் போட்டியிட்டாலும், மழைக்கு பின்னர் தோன்றும் ஈசல்கள் போன்று மறைந்து விடுவார்கள்.

மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று யாரையும் மனதில் வைத்து கூறவில்லை. இயற்கையாக மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் நிலையான நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் அவ்வாறு கூறினேன். அதற்கு செந்தில்பாலாஜி, உமாமகேசுவரி, சுந்தரராஜ் போன்றவர்களே உதாரணம்.

விளாத்திகுளம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். இந்த நிமிடம் வரையிலும் அவரை எங்களுடைய சகோதரராகவே நினைக்கிறோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அவர் மீண்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்புகிறோம். இல்லையெனில் அதற்கு தகுந்தாற்போன்று தேர்தல் யுக்திகளுடன் பணியாற்றுவோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அப்போது, அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, குட்லக் செல்வராஜ், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் பாபு செல்வகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story