விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்


விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்
x
தினத்தந்தி 23 March 2019 9:59 AM GMT (Updated: 23 March 2019 9:59 AM GMT)

வங்காளதேச விமான நிலையத்தில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறி வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4 கோடி பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

இவ்வளவு பரபரப்பான விமான நிலையத்தில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக உள்ளூர் ஊடகங்களிலும் பலமுறை செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன்வீர் அகமது என்கிற வக்கீல் டாக்கா ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர், டாக்கா நகர மேயர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத அதிகாரிகளின் அலட்சியப்போக்கைக் கண்டித்த நீதிபதிகள், சர்வதேச விமான நிலையத்தில் கொசுத் தொல்லை இருப்பதாக கூறப்படுவது நாட்டின் மதிப்பைக் குறைக்கிறது என்று வருத்தம் தெரிவித்தனர்.

Next Story