அ.ம.மு.க. வேட்பாளருடன் சென்றபோது விபத்து தேர்தல் பிரசாரத்தில் கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது தொண்டர்கள் உயிர்தப்பினர்


அ.ம.மு.க. வேட்பாளருடன் சென்றபோது விபத்து தேர்தல் பிரசாரத்தில் கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது தொண்டர்கள் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 5:02 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே அ.ம.மு.க. வேட்பாளருடன் சென்று தேர்தல் பிரசாரம் செய்தபோது, டயர் வெடித்து கார் மரத்தில் மோதியது. இதில் தொண்டர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

பள்ளிப்பட்டு,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக பார்த்திபன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். வேட்பாளர் திறந்த வாகனத்தில் கை கூப்பியபடி வர, அவரது ஆதரவாளர்கள் பின்னால் மற்றொரு காரில் பின் தொடர்ந்தனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியத்தை முடித்துவிட்டு அவர்கள் ஆர்.கே.பேட்டை சோளிங்கர் சாலையில் தனியார் பள்ளி அருகே சென்றனர்.

அப்போது திடீரென வேட்பாளரை பின்தொடர்ந்து சென்ற காரின் டயர் வெடித்தது. பின்னர் நிலைதடுமாறிய கார் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த அ.ம.மு.க. தொண்டர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். காரின் முன்பாகம் சேதம் அடைந்தது. காயம் அடைந்தவர்களை வேட்பாளர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story