பேரளம் அருகே இறுதி ஊர்வலத்தில் தகராறு; சமையல்காரர் அடித்துக்கொலை கோவில் அதிகாரி கைது


பேரளம் அருகே இறுதி ஊர்வலத்தில் தகராறு; சமையல்காரர் அடித்துக்கொலை கோவில் அதிகாரி கைது
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 6:50 PM GMT)

பேரளம் அருகே இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் சமையல்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் மாலையில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து ஏற்பாடு செய்து இருந்தனர். கலியபெருமாளின் உடலை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மயானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மயானத்திற்கு அருகே சென்றபோது மேலவீதியை சேர்ந்த சமையல்காரரான குஞ்சுப்பிள்ளை(வயது 65) என்பவருக்கும், வடக்கு வீதியை சேர்ந்த வள்ளிகந்தன்(36) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது வள்ளிகந்தன், குஞ்சுப்பிள்ளையை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குஞ்சுப்பிள்ளையை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து குஞ்சுப்பிள்ளையின் மகன் மணிகண்டன் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனக்கும், வள்ளிகந்தனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இறுதிச்சடங்கிற்கு சென்ற தனது தந்தையிடம் தகராறு செய்து தாக்கியதில் தனது தந்தை குஞ்சுப்பிள்ளை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளிகந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த குஞ்சுப்பிள்ளைக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள வள்ளிகந்தன் திருப்பாம்புரம் கோவிலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Next Story