பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் அருண் எச்சரிக்கை


பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் அருண் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 March 2019 11:30 PM GMT (Updated: 23 March 2019 7:57 PM GMT)

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்த பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 18–ந்தேதி நடக்கிறது. இந்த வாக்குப்பதிவின்போது சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்களுக்கு பலகட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்ட தொழில் மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தொழில் மைய இயக்குனர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சிகள் குறித்து புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சிறப்பான முறையில் தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கணினி மூலம் தற்செயல் கலப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் பணி குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள 23 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 738 வாக்குச்சாவடிகள் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான 27 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி அதிகாரிகளாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 ஆயிரத்து 898 அரசு அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை மற்றும் பயிற்சி வகுப்புக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து தேர்தல் பணிச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு வாக்குப்பதிவின்போது பணியிலிருக்கும் வாக்குச்சாவடிகளிலேயே வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்களிக்க உள்ள அரசு அலுவலர்கள் தேர்தல் பணியமர்த்தப்பட்டிருப்பின் அவர்களுக்கென தபால் வாக்குப்பதிவிற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிச்சான்றிதழ் அல்லது தபால் வாக்குச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பபடிவம் பணியாணையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் படிவம் 12ஏ–வை பூர்த்தி செய்து அந்தந்த உதவி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதிகாரிகள், அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு வருகிற 26–ந்தேதிவரை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்கென அமர்த்தப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவரவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாணை மற்றும் அழைப்பாணையின்படி பயிற்சி பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்களை அட்டவணைப்படி பயிற்சிகளில் கலந்துகொள்ள ஏதுவாக அவர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும் தவறாது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு தேர்தல் பணியில் ஈடுபட கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி துறை ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.


Next Story