கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம்


கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம்
x
தினத்தந்தி 23 March 2019 10:15 PM GMT (Updated: 23 March 2019 8:41 PM GMT)

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே முதியவர் பிணம் கிடந்தது. போலீசார் இடையே எழுந்த எல்லை பிரச்சினையால் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே நேற்று காலை 8 மணி அளவில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 70 வயது இருக்கும் என்று தெரிய வந்தது. அவர் பெயர், ஊர் விவரம், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

முதியவர் பிணம் ரெயில் நிலையம் அருகே கிடந்ததால், ரெயில்வே போலீசார் தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கன்னியாகுமரி போலீசார் கருதினார்கள்.

கேட்பாரற்று கிடந்தது

யார் வழக்குப்பதிவு செய்வது என்பதில் கன்னியாகுமரி போலீசாருக்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும் இடையே எல்லை பிரச்சினை எழுந்தது. இதனால் முதியவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படாமல் பகல் 3 மணி வரை அதே இடத்தில் கேட்பாரற்று கிடந்தது.

அதன்பிறகு ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story