பழனி அருகே கார் உருண்டு விபத்து: மலேசியாவை சேர்ந்த தாய்-மகன் உள்பட 3 பேர் பலி 2 பேர் படுகாயம்


பழனி அருகே கார் உருண்டு விபத்து: மலேசியாவை சேர்ந்த தாய்-மகன் உள்பட 3 பேர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 March 2019 11:45 PM GMT (Updated: 23 March 2019 9:21 PM GMT)

பழனி அருகே கார் உருண்டு விபத்துக்குள்ளானதில் மலேசியாவை சேர்ந்த தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழனி,

மலேசியா கோலாலம்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. தொழிலதிபர். அவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 40). இந்த தம்பதிக்கு சஞ்சய் (15), சரவணன் (10), பழனி (10) என்ற 3 மகன்களும், சங்கவி (8), மஞ்சிகா (6) ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் பழனி, சரவணன் ஆகியோர் இரட்டையர்கள் ஆவர். நேற்று அதிகாலை சாமி தரிசனம் செய்ய ஈஸ்வரி தனது குழந்தைகளுடன் பழனிக்கு வந்தார்.

பழனியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தனது குழந்தைகளுடன் பழனி பகுதியில் உள்ள அணைகளை சுற்றி பார்க்க விரும்பினார். இதனையடுத்து பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் (28) உதவியுடன் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தினார்.

நேற்று மாலை 5 மணி அளவில் ஈஸ்வரி மற்றும் அவருடைய குழந்தைகள் ஒரு காரில் பழனி-கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ராஜேசும் சென்றார். பழனி அடிவாரம் குரும்பபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) காரை ஓட்டினார்.

பழனியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரட்டாற்று பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் இருந்த பெயர் பலகையில் மோதி கார் உருண்டு விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக கார் சென்றதால், 300 அடி தூரம் உருண்டு சாலையோரத்தில் உள்ள கட்டிடத்தில் மோதி நின்றது. இதில் அப்பளம் போல் கார் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஈஸ்வரி, டிரைவர் பாலகிருஷ்ணன், சஞ்சய் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பழனி, ராஜேஸ் ஆகியோரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சங்கவி, மஞ்சிகா, சரவணன் ஆகியோர் காயமின்றி தப்பினர்.

விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கூறும்போது, சினிமாவில் வருவது போல் அசுர வேகத்தில் கார் வந்தது. திடீரென தாறுமாறாக ஓடி, பல அடி தூரம் உருண்டது. மேலும் அருகே இருந்த சுவற்றில் மோதியால் பலத்த சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றனர். விபத்து குறித்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story