பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த மிகப்பெரிய கறை ஐகோர்ட்டு பெண் நீதிபதி வேதனை


பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த மிகப்பெரிய கறை ஐகோர்ட்டு பெண் நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 24 March 2019 10:30 PM GMT (Updated: 24 March 2019 6:48 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் மீது விழுந்த மிகப்பெரிய கறை என்றும், இந்த சம்பவம் ஆண்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சென்னை ஐகோர்ட்டு பெண் நீதிபதி வேதனையுடன் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு பெண் வக்கீல்கள் கூட்டமைப்பு, சட்டக்கதிர் சட்ட புத்தகம் இணைந்து சர்வதேச மகளிர் தின கருத்தரங்கை சென்னையில் நடத்தியது. ‘அரசியலில் பெண்கள் அதிகாரமயமாக்கல், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் - பிரச்சினைகளும் சவால்களும்’ என்ற தலைப்புகளில் நடந்த இந்த கருத்தரங்கை ஐகோர்ட்டு மூத்த பெண் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தொடங்கிவைத்தார்.

அப்போது, ‘பெண்களின் உரிமைகள் என்னென்ன என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது’ என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, ‘பெண்களுக்கு அரசியல் அதிகார உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு பெற்றாலும், அலுவல் ரீதியான முடிவுகளை அவர்களின் கணவர்களே எடுக்கும் சூழ்நிலைதான் நிலவுகிறது’ என்று பேசினார்.

மேலும், ‘பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. அதுவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் மீது விழுந்த மிகப்பெரிய கறையாகும். இந்த சம்பவம் ஆண்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் நீதிபதி பி.டி.ஆஷா கூறினார்.

இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘பெண்ணாய் பிறந்ததற்காக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போதும், ஆண்களின் உலகில் பெண்களாகி நாமும் சாதித்து முன்னேறியுள்ளோம் என்று கூறுவார். அதைதான் எப்போதும் நான் நினைத்து பார்ப்பேன். எனக்கு முகநூல், வாட்ஸ் அப் என்று எதுவும் கிடையாது. அதுபோன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதில் இருந்து விலகி நின்றால், பெண்கள் தங்களை தானே பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் பெண் சாதனையாளர்கள் பலருக்கு, ‘பெண்களின் மாமணி’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மூத்த வக்கீல் ஆர்.காந்தி, காங்கிரஸ் எம்.பி. ஆமி யாஸ்னிக், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் வரவேற்றார். தமிழ்நாடு பெண் வக்கீல்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி நன்றியுரை ஆற்றினார்.

Next Story