காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி


காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 24 March 2019 10:15 PM GMT (Updated: 24 March 2019 7:27 PM GMT)

திருவோணம் அருகே விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்றார். அவர் காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதனால் மன வேதனை அடைந்த பெண் கிராம நிர்வாக அதிகாரி நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நேற்று காலை மருத்துவ மனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம், தற்கொலை முயற்சிக்கு காதல் விவகாரத்தை காரணமாக கூறக்கூடாது என கூறி சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

விசாரணை

பெண் கிராம நிர்வாக அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story