கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி


கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 7:48 PM GMT)

கரூர் அருகே கோவில் திருவிழாவிற்கு தீர்த்தக்குடம் எடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், பரமத்தி அருகே காருடையாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவர திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக காருடையாம்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர். அவர்களுடன் காருடையாம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த நாகராஜ் மகன் பிரபாகரன் (வயது 20), தேவராஜ் மகன் புருஷோத்தமன் (17), பரமத்தி அருகே உள்ள புதுக்கநல்லி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் நவீன்குமார் (18) ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு, தீர்த்தக்குடம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதில் பிரபாகரன், புருஷோத்தமன், நவீன்குமார் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது, ஆற்றில் மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழி இருந்த ஆழமான பகுதிக்கு 3 பேரும் எதிர்பாராத விதமாக சென்றுவிட்டனர்.

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அவர்களுடன் வந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு குளிக்க வந்த பொதுமக்களும், மற்ற பக்தர்களும் ஆற்றில் இறங்கி 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

இதைதொடர்ந்து வேலாயுதம்பாளையம் மற்றும் கொடுமுடி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் திருமுருகன் (வேலாயுதம்பாளையம்), விவேகானந்தன் (கொடுமுடி) ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆழமான பகுதியில் அவர்கள் மூழ்கியதால் 3 பேரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு படைவீரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் நவீன உபகரணங்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கி அவர்களது உடல்களை தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு புருஷோத்தமன், நவீன்குமார் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது. பிரபாகரனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புகளூர் தாசில்தார் ராஜசேகரன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயந்தி, வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஆற்றில் மூழ்கி பலியான நவீன்குமார் கரூரில் பஸ்களுக்கு பாடி கட்டும் நிறுவனத்திலும், பிரபாகரன் புகளூரில் உள்ள கிரஷர் ஆலையிலும் ஊழியர்களாக பணியாற்றி வந்ததும், புருஷோத்தமன் புகளூர் காகித ஆலை ஐ.டி.ஐ.யில் படித்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் புருஷோத்தமன், நவீன்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். கோவில் திருவிழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலியானதால் காருடையாம்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Next Story