‘சுதீசின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்’ - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


‘சுதீசின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்’ - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 11:17 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் சுதீசை வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்று பகண்டை கூட்டுரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இதையொட்டி வேட்பாளர் அறிமுக கூட்டம் பகண்டை கூட்டுரோட்டில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை அறிமுகம் செய்து வைத்தார். ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருணகிரி வரவேற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பா.ம.க. நிர்வாகி பாலசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி கணேஷ், பா.ஜனதா நிர்வாகி ஜோதிநாதன் ஆகியோர் வேட்பாளர் சுதீஷ் வெற்றிபெற ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

இந்த தேர்தல் மிகவும் திருப்புமுனை ஏற்படுத்தும் தேர்தல். இந்த தேர்தலில் நமது கூட்டணி கட்டாயம் வெற்றி பெற்றாகவேண்டும். அ.தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனும் அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகலாம். இதுபோல் இந்தியாவில் எந்த கட்சியிலும் முடியாது. அதுபோல் தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணி தொண்டர்கள் விருப்பத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. நாம் செய்யவேண்டியது ஒன்றேதான். ஒரு கிராமத்தில் 300 குடும்பங்கள் இருந்தால் நமது கூட்டணிக்கு 250 குடும்பங்கள் இருக்கும். அந்த ஓட்டுகள் அனைத்தையும் பெறவேண்டும். இந்த தேர்தல் வாழ்வா? சாவா? தேர்தல். அதை மனதில் வைத்து பணியாற்றவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் சுதீசை வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இதையடுத்து எல்.கே.சுதீஷ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

என்னை கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வைத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டாக்டர் ராமதாசும் தான். மத்தியில் மோடி ஆட்சி வந்தால்தான், நமது மாநில வளர்ச்சி பணிகளை செய்யமுடியும். நான் தற்போது வேட்பாளராக உள்ளேன். நான் வெற்றிபெற்ற உடன் என்னைவிட யாரும் செய்யமுடியாத அளவிற்கு இந்த தொகுதிக்கு நிறைய திட்டங்களை செய்ய உள்ளேன். உங்களுடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு எல்.கே.சுதீஷ் பேசினார்.

கூட்டத்தில் காமராஜ் எம்.பி., அ.தி.மு.க. நிர்வாகிகள் கதிர்.தண்டபாணி, பழனி, சந்திரசேகரன், பாலமுருகன், சின்னராஜ். பழனி, தங்கவேல், தே.மு.தி.க. நிர்வாகிகள் அண்ணாதுரை, டிகே.கோவிந்தன் உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சங்கராபுரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தே.மு.தி.க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் துரைவேல், த.மா.கா. மாவட்ட தலைவர் கணேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க ஒன்றியசெயலாளர் அரசு வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை அறிமுகப்படுத்தி வைத்து ஆலோசனை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், சன்னியாசி, பா.ம.க. நிர்வாகிகள் ரமேஷ், பப்லு, தே.மு.தி.க. நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜம்ஷீத்பஷீர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தியாகதுருகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, தே.மு.தி.க. வேட்பாளர் சுரேசை அறிமுகப்படுத்தி பேசினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம்சுந்தர், பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய அவைத்தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் நகர செயலாளர் ராஜி, துணை செயலாளர் வரதம்மாள் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அய்யப்பா நன்றி கூறினார்.
==

Next Story