பேரணாம்பட்டு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிய மர்மம் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்


பேரணாம்பட்டு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிய மர்மம் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 March 2019 10:45 PM GMT (Updated: 25 March 2019 5:11 PM GMT)

பேரணாம்பட்டு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு, 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்பட்டி கிராமம் இந்திராநகரை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அபிநயா (வயது 22). இவரும் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது.

கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந் தேதி அபிநயா, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபிநயாவிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் வேலூர் சப்-கலெக்டர் மெகராஜ் மேல் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று அபிநயாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - மேல்பட்டி சாலையில் அபிநாயவின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அபிநயாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் சதீஷ்குமார், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பட்டி மற்றும் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் அபிநயாவின் இறப்பு தொடர்பாக கணவர் சதீஷ்குமார், மாமனார் விநாயகம், மாமியார் கலா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story