ஆரல்வாய்மொழியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை மகன் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு


ஆரல்வாய்மொழியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை மகன் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 25 March 2019 11:00 PM GMT (Updated: 25 March 2019 5:31 PM GMT)

ஆரல்வாய்மொழியில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்களும், நாகராஜன் (33) என்ற மகனும் இருந்தனர்.

நாகராஜன், தென்காசி பகுதியில் உள்ள காற்றாலையில் வேலை செய்து வந்தார். 10 மாதங்களுக்கு முன் காற்றாலையில் ஏற்பட்ட பழுதை நீக்கும் போது, எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 18–ந் தேதி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

அதைத்தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் முருகேசன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு முருகேசன் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகு நேரமாகியும்  அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தபோது முருகேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story