துவரங்குறிச்சி அருகே பரிசுகள் இல்லாத ஜல்லிக்கட்டு


துவரங்குறிச்சி அருகே பரிசுகள் இல்லாத ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 25 March 2019 10:45 PM GMT (Updated: 25 March 2019 9:19 PM GMT)

துவரங்குறிச்சி அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதியால் பரிசுகள் வழங்கப்படவில்லை.

வையம்பட்டி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டன. இந்நிலையில் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியில், பரிசு பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து அங்குள்ள தொட்டியத்து சின்னையா, சின்னம்மாள் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை நடைபெற்றது. போட்டியை மருங்காபுரி தாசில்தார் பன்னீர்செல்வம், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

3 பேர் காயம்

அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 190 காளைகளை, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்டனர். 66 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வீரர்களை பந்தாடிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு பரபரப்பற்ற நிலையில் காணப்பட்டது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமானவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். போட்டி காலை 8.45 மணிக்கு தொடங்கி 11.15 மணிக்கு நிறைவு பெற்றது. 

Next Story