மறைமலைநகர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது


மறைமலைநகர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 26 March 2019 10:15 PM GMT (Updated: 26 March 2019 7:39 PM GMT)

மறைமலைநகர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 29), கூலித்தொழிலாளி, இவரது மனைவி மஞ்சுளா (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பவித்ரா (12), பரிமளா (11) என்ற மகள்களும், பிரவீன் (7) என்ற மகனும் உள்ளனர். முருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள்கள், மகனை சொந்த ஊரில் உள்ள பாட்டி வீட்டில் விட்டுவிட்டு தனது மனைவியுடன் மறைமலைநகர் அடுத்த மட்டானை ஓடை கிராமத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முருகன் வேலை செய்யும் விவசாய தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

ஆனால் முருகன் இறந்து கிடப்பதை பார்த்து அவரது மனைவி மஞ்சுளா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் சர்வசாதாரணமாக உறவினர்களிடம் பேசி கொண்டிருந்தார். போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மஞ்சுளாவின் செல்போன் எண்ணுக்கு யார் யார் பேசி உள்ளனர் என்பது பற்றி ஆய்வு செய்த போது ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் மஞ்சுளா அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. அந்த செல்போன் எண் யாருடையது என்று போலீசார் விசாரித்தபோது மஞ்சுளாவின் பக்கத்து வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்துவரும் சிவா (28) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் முருகனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவாவை அழைத்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனையடுத்து போலீசார் சிவாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவர், முருகனின் மனைவி மஞ்சுளாவுடன் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் முருகனின் மனைவி மஞ்சுளா மற்றும் சிவாவை கைது செய்தனர்.

பின்பு மஞ்சுளா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவா என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்தோம். என்னுடைய கள்ளத்தொடர்பு பற்றி எனது கணவர் முருகனுக்கு சில மாதங்களிலே தெரியவந்தது. இதனால் கணவர் கள்ளத்தொடர்பை துண்டிக்கும் படியும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால் கணவர் கூறியும் நான் தொடர்ந்து சிவாவுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்தேன். இதனால் எனது கணவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த நிலையில் எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் எனது கணவரை கொலை செய்து விடலாம் என்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து முடிவு செய்தேன். எனது கணவர் தோட்டத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது கள்ளக்காதலனும் நானும் அங்கே சென்று எனது கணவரை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் நான் என் வீட்டுக்கும், கள்ளக்காதலன் அவரது வீட்டுக்கும் சென்று விட்டார். நான் எனது கணவரை இரவில் இருந்து காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் கூறி எனது கணவரை தேடுவது போல் இரவு முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன். இதனையடுத்து அதிகாலை வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

பின்னர் காலையில் என் கணவர் இறந்து கிடப்பதாக செய்தி ஊர் முழுவதும் பரவியது நானும் எதுவும் நடக்காதது போல் என் கணவர் இறந்து கிடக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்தேன். ஆனால் போலீசார் என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை வைத்து சிவாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துவிட்டனர். இதனால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி மஞ்சுளா, விழுப்புரம் மாவட்டம் ஓட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த கள்ளக்காதலன் சிவா ஆகிய இருவரையும் போலீசார் நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story