கடலூர் அருகே, தீக்குளித்த பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கொத்தனார் மீது வழக்கு


கடலூர் அருகே, தீக்குளித்த பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கொத்தனார் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2019 10:59 PM GMT (Updated: 27 March 2019 10:59 PM GMT)

கடலூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கொத்தனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் அருகே உள்ள வடுகப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி லிங்கேஸ்வரி(வயது 28). இவர் கணவரை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஸ்வரி கட்டிட வேலைக்கு சென்று வந்த போது, திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த கொத்தனார் அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அசோக்குக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லிங்கேஸ்வரியை அசோக் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று திருமணம் செய்ய மறுத்த லிங்கேஸ்வரியிடம் அவர் தகராறு செய்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த லிங்கேஸ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் அலறி துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் பலத்த தீக்காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லிங்கேஸ்வரி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கொத்தனார் அசோக் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.

Next Story