கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் ஆதரவு


கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் ஆதரவு
x
தினத்தந்தி 28 March 2019 11:00 PM GMT (Updated: 28 March 2019 7:55 PM GMT)

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இதைத் தொடர்ந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை குமரி மாவட்ட தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் தங்களது ஆதரவு கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், வேல்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரம் தொடர்பாக பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மேலும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் பைஜு நிசித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவருக்கு பொன்னாடையும் அணிவித்தார். அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story