நம்பியூர் அருகே பயங்கரம் ரூ.1000 திருப்பி கொடுக்காததால் ரிக் தொழிலாளி வெட்டிக்கொலை உறவினர் கைது


நம்பியூர் அருகே பயங்கரம் ரூ.1000 திருப்பி கொடுக்காததால் ரிக் தொழிலாளி வெட்டிக்கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 28 March 2019 11:00 PM GMT (Updated: 28 March 2019 9:57 PM GMT)

நம்பியூர் அருகே ரூ.1000-த்தை திருப்பி கொடுக்காததால் ரிக் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.

நம்பியூர், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நம்பியூர் அருகே புதுசூரிபாளையம் ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (42). இவர் கிருபாகரனின் உறவினர் ஆவார்.

கிருபாகரன் முதலில் வாடகைக்கு கார், ஆட்டோ ஓட்டி வந்தார். அதன்பின்னர் அந்த வேலையை விட்டு விட்டார். அம்மாசையிடம், தனக்கு ரிக் வண்டியில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்து கிருபாகரனை தன்னுடன் ரிக் வண்டியில் வேலைக்கு சேர்த்துள்ளார். அங்கு அவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அதைத்தொடர்ந்து 2 பேரும் வடமாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். மேலும் அம்மாசை வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ரூ.1000 வாங்கி கிருபாகரனுக்கு முன்பணமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருபாகரன் தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறி வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.

கடந்த வாரம் அம்மாசை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் கிருபாகரனிடம், நான் வாங்கி கொடுத்த ரூ.1000-த்தை திருப்பி என்னிடம் கொடுத்து விடு’ என்றார். அதற்கு அவர், பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருபாகரன் தனது வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அம்மாசை, தான் வைத்திருந்த அரிவாளால் கிருபாகரனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். மேலும் அவரது கையிலும் வெட்டு விழுந்தது.

இதனால் கிருபாகரன் வலி தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா” என அலறினார். இதில் சிறிதுநேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மாசையை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story