பரங்கிமலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.37 கோடி பறிமுதல் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்றபோது சிக்கியது


பரங்கிமலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.37 கோடி பறிமுதல் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்றபோது சிக்கியது
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 4:32 PM GMT)

பரங்கிமலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 37 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம், தங்க நகை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் அதிகாரிகள் பரங்கிமலை பட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன கார் அந்த வழியாக வந்தது. பறக்கும் படையினர் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

காரில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள், அந்த பணத்தை சென்னை புறநகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. துப்பாக்கி ஏந்திய காவலரும் அவர்களுடன் செல்லவில்லை.

இதையடுத்து காரில் இருந்த ரூ.1 கோடியே 37 லட்சத்தை பறிமுதல் செய்து, பரங்கிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 37 லட்சத்தை ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபன் கூறும்போது, “பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 37 லட்சம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் மேல் நடவடிக்கைக்காக வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story