காரியாபட்டி அருகே பெண் தலையாரி கழுத்தை நெரித்து கொலை தந்தை கைது


காரியாபட்டி அருகே பெண் தலையாரி கழுத்தை நெரித்து கொலை தந்தை கைது
x
தினத்தந்தி 29 March 2019 11:30 PM GMT (Updated: 29 March 2019 10:54 PM GMT)

காரியாபட்டி அருகே பெண் தலையாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஆனந்தி(வயது 31). இவர் காரியாபட்டி தாலுகாவில் உள்ள மேலகள்ளிக்குளம் தலையாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இதனால் தனது மகன்கள் பாலசுப்பிரமணி(7), கார்த்திக் செல்வம்(5) ஆகியோருடன் மல்லாங்கிணறு வி.வி.நகரில் வசித்து வந்தார். ஆனந்தியின் தந்தை கணேசனும் (60), அதே பகுதியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஆனந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பலமுறை ஆனந்தியை அவரது தந்தை கணேசன் கண்டித்துள்ளார். ஆனால் தந்தையின் கண்டிப்பை ஆனந்தி பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக கணேசன் நேற்று முன்தினம் இரவு ஆனந்தியை மீண்டும் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் ஆனந்தியை கழுத்தை நெரித்தார். இதில் மூச்சு திணறிய ஆனந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், மல்லாங்கிணறு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

தந்தையே மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story