திருமணமான 3 மாதத்தில் சம்பவம் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்


திருமணமான 3 மாதத்தில் சம்பவம் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 31 March 2019 12:30 AM GMT (Updated: 30 March 2019 7:22 PM GMT)

தனிக்குடித்தனம் வர மறுத்ததால், சென்னையில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சந்தியா(20). இருவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தனர்.

பின்னர் தனது பெற்றோர் வீட்டிலேயே குடியிருக்க சந்தியா விரும்பினார். அதற்கு அருண்குமாரும் ஒப்புக்கொண்டார். நாளடைவில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அருண்குமார் தனிக்குடித்தனம் செல்வதற்காக ராமாபுரத்தில் வாடகைக்கு வீடு பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் சந்தியா தனிக்குடித்தனம் செல்ல விரும்பவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக நேற்று காலை தகராறு எழுந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அருண்குமார் சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, திடீரென சந்தியாவை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற மாமியார் சரிதாவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் ரத்த காயங்களுடன் கிடந்த சந்தியா, அவரது தாயார் சரிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சந்தியா இறந்துவிட்டார். காயம் அடைந்த சரிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘திருமணம் ஆன கொஞ்ச நாள் பெற்றோர் வீட்டில் இருக்கலாம் என்று சந்தியா கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து அங்கேயே இருந்ததால் எங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது. எனவே தனிக்குடித்தனம் செல்ல ஏற்பாடு செய்தேன். ஆனால் சந்தியா பெற்றோரை விட்டு வர முடியாது என்று அடம்பிடித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கொலை செய்துவிட்டேன்.’ என்றார்.

திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கட்டிய கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story