தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 March 2019 9:30 PM GMT (Updated: 30 March 2019 7:41 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி வகுப்பு நடக்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி வகுப்பு நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்

நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் நெல்லை, தென்காசி (தனி) என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 15 ஆயிரத்து 182 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக கடந்த 24-ந் தேதி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

நெல்லை சட்டசபை தொகுதிக்கு நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியிலும், பாளையங்கோட்டை தொகுதிக்கு பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதேபோல் அந்தந்த தொகுதிகளில் பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்ட பயிற்சி 7-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Next Story