முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறைகிணறுகள் சீரமைக்கப்படுமா


முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறைகிணறுகள் சீரமைக்கப்படுமா
x
தினத்தந்தி 31 March 2019 10:15 PM GMT (Updated: 31 March 2019 11:35 PM GMT)

உப்புக்கோட்டை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்புக்கோட்டை, 

தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, உப்பார்பட்டி ஆகிய 2 கிராமங்கள் வழியாக முல்லைப்பெரியாறு செல்கிறது. இந்த பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக உப்புக்கோட்டையில் முல்லைப்பெரியாற்றில் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உறைகிணறுகளில் உப்புக்கோட்டை-சில்லமரத்துபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுத்து டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், மேலச்சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் உள்பட 20 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உப்பார்பட்டி-கோவிந்தநகரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தப்புக்குண்டு, தாடிச்சேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது முல்லைப்பெரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது. அந்த பகுதியில் 4 உறைகிணறுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஆற்றில் குளிக்க ஏராளமானோர் சென்று வருகிறார்கள். அவர்கள் உறைகிணறுகள் அருகே நின்று குளிக்கின்றனர். அப்போது உறைகிணறுகளின் சேதமடைந்த பகுதி உடைந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் குளித்து வருகின்றனர்.

எனவே முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறை கிணறுகளால் பெரும் விபத்து ஏற்படுவதற்குள், அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story