திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரி– கார் மோதல்; 5 பேர் படுகாயம்


திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரி– கார் மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 April 2019 10:45 PM GMT (Updated: 3 April 2019 7:44 PM GMT)

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரி– கார்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

திருவள்ளூர்,

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் கன்டெய்னர் லாரி சாலையோரம் இருந்த கடை மீது மோதியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் அந்த மோட்டார் சைக்கிள்கள் சுக்குநூறாக சேதம் அடைந்தது. மேலும் அந்த லாரியின் டீசல் டேங்க் பெயர்ந்து 10 மீட்டர் தொலைவில் விழுந்தது. இந்த விபத்தில் காரின் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரியை செவ்வாப்பேட்டை போலீசார் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் – ஆவடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story