பலாத்காரம் செய்து சிறுமி கொலை, கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை


பலாத்காரம் செய்து சிறுமி கொலை, கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 3 April 2019 11:30 PM GMT (Updated: 3 April 2019 8:40 PM GMT)

துடியலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

துடியலூர்,

துடியலூர் அருகே கடந்த 25-ந் தேதி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். இந்த கொலை தொடர்பாக தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக்கொண்டார். கைதான சந்தோஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சந்தோஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். கோர்ட்டு அனுமதி அளித்ததும் சந்தோஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன்பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் மருத்துவ பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கை வழக்கின் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படும். இந்த வழக்கில் சந்தோஷ்குமாருக்கு கடும் தண்டனை கிடைப்பதற்காக அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story