குருபரப்பள்ளி அருகே ராணுவ வீரர் மனைவி தலையணையால் அமுக்கி கொலை


குருபரப்பள்ளி அருகே ராணுவ வீரர் மனைவி தலையணையால் அமுக்கி கொலை
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 6:35 PM GMT)

குருபரப்பள்ளி அருகே ராணுவ வீரரின் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டார்.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி(வயது 29). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது தாய் வீட்டில் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு, வீட்டை சுத்தம் செய்து வருவதாக கவுதமி தனது வீட்டிற்கு சென்றார். ஆனால் தனது குழந்தைகளை அழைத்து வர மீண்டும் அவர் செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கவுதமியின் பெற்றோர், தங்கள் மகள் வராததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மூக்கில் ரத்த காயங்களுடன் கவுதமி பிணமாக கிடந்தார். அருகில் தலையணை முழுவதும் ரத்தமாக காணப்பட்டது. அவரை யாரோ? தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அங்கு சென்று கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கவுதமியின் கணவர் ராஜேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story