மும்பை விமான நிலையத்தில் காலணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்


மும்பை விமான நிலையத்தில் காலணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2019 10:17 PM GMT (Updated: 4 April 2019 10:17 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை பக்ரைனில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்திருந்த பயணி ஒருவர், வேறு ஒரு விமானம் மூலம் டெல்லி செல்ல இருந்தார்.

இந்தநிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவரை சோதனை செய்தார். அப்போது அவரிடம் உலோகப்பொருள் இருப்பது தெரியவந்தது.

காலணியில் தங்கம்

எனவே பாதுகாப்பு படை வீரர் அவர் அணிந்து இருந்த காலணி மற்றும் பொருட்களை எக்ஸ்ரே செய்யும் எந்திரம் வழியாக எடுத்து வருமாறு கூறினார். அப்போது காலணிக்குள் ஏதோ பொருள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் காலணியை கிழித்து பார்த்தனர். அப்போது அதில் 2 தங்க கட்டிகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்த தங்கத்தை சுங்கவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story