தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சவுமியா அன்புமணி பேச்சு


தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சவுமியா அன்புமணி பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 6 April 2019 9:37 PM GMT)

‘தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ என்று சவுமியா அன்புமணி கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி, தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனிடையே நேற்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நார்த்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சவுமியா அன்புமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரித்தார். வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழ சின்னத்திற்கு அவர் ஓட்டு கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அன்புமணி ராமதாசை இந்த மாவட்ட மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 78 ஆண்டுகள் பொதுமக்களின் கனவு திட்டமான தர்மபுரி- மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டம் ரூ.385 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை போராடி பெற்று தந்த அன்புமணி ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இதுபோன்று தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி வேட்பாளர்களை பொதுமக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டணிக்கு மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். பிரதமர் மோடி தலைமையில் வலிமையான இந்தியாவை உருவாக்கவும், தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடரவும் எங்கள் கூட்டணிக்கு பெண்களின் ஆதரவு பெருகி வருகிறது. எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரம் இந்த தேர்தலில் எடுபடாது.

இவ்வாறு சவுமியா அன்புமணி கூறினார்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில இளம்பெண்கள் சங்க தலைவர் சாந்தினி, ஒன்றிய செயலாளர் அன்பு கார்த்திக், அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், முன்னாள் கவுன்சிலர் செந்தில், செயற்குழு உறுப்பினர் செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story