வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களில் 325 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் டாக்டர் ராமதாஸ் பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களில் 325 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 9:41 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களில் 325 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 24 கட்சிகளும், 450 சமுதாய அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதும், இந்த பகுதியில் ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாட்டில் ரெயில் சேவை இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. அந்த குறையை நிச்சயமாக தீர்த்து வைப்போம். அதே போல திண்டிவனம் - கிருஷ்ணகிரி 4 வழிச்சாலை 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுப்போம். கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலுக்கு முன்பாகவே உங்கள் அனைவருக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 325 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவும். உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, அரியானா ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சி படுதோல்வி அடையும். இந்த 10 மாநிலங்களில் உள்ள 350 தொகுதிகளில், 25 இடங்களில் கூட காங்கிரஸ் கூட்டணியால் வெற்றி பெற முடியாது.

நாட்டில் 100 இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் அமேதி தொகுதியில் போட்டியிடுவதுடன், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவரை பிரதமர் என்று அரசியல் ஞானி மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ராகுலை பிரதமராக யாரும் ஏற்கவில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு என்று பலருக்கு பிரதமர் பதவியின் மீது ஆசை உள்ளது.

அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க., கலைஞருடன் முடிந்து போய் விட்டது. மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் தெரியாமல் மேடைக்கு மேடை உளறுகிறார். வறுமையை ஒழிப்போம் என ராகுல் காந்தி கூறுகிறார். உங்களின் கொள்ளு தாத்தா நேருவும் அதை தான் சொன்னார். உங்களின் பாட்டி இந்திராகாந்தியும் அதை தான் சொன்னார். உங்கள் அப்பா ராஜீவ்காந்தி, அம்மா சோனியா காந்தி, உங்களின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எல்லோரும் அதை தான் சொன்னார்கள்.

இப்போது நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள். உங்களால் வறுமையை ஒழிக்க முடியாது. அதே நேரத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளன. இந்த தேர்தலுக்கு பிறகு தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. அரசு ஊழியர்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன. அதை நிச்சயமாக அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றி தருவோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, அசோக்குமார் எம்.பி., மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அன்பரசன், எஸ்.எம்.முருகேசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தசரதன், ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story