மயிலாடுதுறை கோர்ட்டு வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி நீதிபதி தொடங்கி வைத்தார்


மயிலாடுதுறை கோர்ட்டு வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி நீதிபதி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 7 April 2019 7:20 PM GMT)

மயிலாடுதுறை கோர்ட்டு வளாகத்தில் தொடுதிரை கணினி வசதியை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட நீதிபதி பத்மநாபன் கலந்து கொண்டு தொடுதிரை கணினி வசதியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி வழக்கு விவரங்களை சம்பந்தப்பட்டவர்களே தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை கணினி வசதி ஏற்கனவே நாகை கோர்ட்டில் உள்ளது. தற்போது மயிலாடுதுறை கோர்ட்டிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடுத்தவர்கள் பதிவு செய்த வழக்குகள் எந்த நிலையில் இருக்கிறது, இந்த வழக்கு அடுத்த விசாரணைக்கு எப்போதுவரும் என்பது உள்ளிட்ட விவரங்களை தொடுதிரை கணினியில் பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம். வழக்கு எண், வக்கீல் பெயர், வழக்கு தொடர்ந்தவர் இதில் ஏதாவது ஒன்று தெரிந்து இருந்தால் வழக்கின் விவரங்களை இந்த தொடுதிரை கணினியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோர்ட்டில் உள்ள சர்வருடன், இந்த தொடுதிரை கணினி இணைக்கப்பட்டு இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிபதி ஆனந்தன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ், மாஜிஸ்திரேட்டுகள் செல்லபாண்டியன், ஜீயாவுர்ரகுமான், மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story