சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 7 April 2019 7:43 PM GMT)

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம்,

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் பூச்சொரிதல் மற்றும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். பச்சை பட்டினி விரத நாட்களில் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியை பெற்று, படைத்தல்(கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல்(ரிஷப வாகன காட்சி 5-ம் திருநாள்), அழித்தல்(திருத்தேர் 10-ம் திருநாள்), மறைத்தல்(ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் 11-ம் திருநாள்), அருள் பாலித்தல் (தெப்பம் 13-ம் திருநாள்) இந்த 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள் புரிந்து வருவது புராண மரபு.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் 7.40 மணிக்கு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரை.ராஜசேகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இரண்டாம் நாளான இன்று(திங்கட்கிழமை) முதல் தினமும் காலை 10 மணிக்கு பல்லக்கிலும், மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9-ம் நாளான 15-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 19-ந் தேதி காலை 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார், கோவில் மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் கோவிலின் பின்பக்க கதவு அடைக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்னர் கோவிலை வலம் வந்து தெற்கு வாசல் வழியாக வெளியே செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வெற்றி பெற்றால் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். இதற்கு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதற்கிடையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக சமயபுரம் வந்தார். அவரை வரவேற்று கோவில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்த அவர், 10 நிமிடங்கள் கோவிலில் இருந்து விட்டு பின்னர் காரில் புறப்பட்டு சென்றார். 

Next Story