அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 8:31 PM GMT)

அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சோழவந்தான் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–

ஒரு மரத்திற்கு பலம் அதன் வேர் தான். அ.தி.மு.க.வின் வேர் தொண்டர்கள். எனவே தான் எம்.ஜி.ஆர். தொண்டர்களை அழைக்கும் போது எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று கூறுவார். நடைபெறும் தேர்தலின் மூலம் இரட்டை இலையை இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க உள்ளோம். அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து தான் போவார்கள் என்ற வரலாற்றை இந்த தேர்தல் மூலம் உருவாக்குவோம்.

இங்கிருந்து சென்ற தங்க தமிழ்ச்செல்வன் இரட்டை இலையின் மூலம் பதவி சுகம் அனுபவித்து அதன் மூலம் தன்னை அடையாளப்படுத்தி தன் வாழ்வை வளமாக்கி கொண்டார். இப்போது இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டும் என்று ஊர், ஊராக சுற்றி வருகிறார். ஆனால் தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் என்று யார் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

காங்கிரஸ் சார்பில் ஈரோட்டிலிருந்து வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியில் போட்டியிடுகிறார். இவர் 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்தார். அவர் மத்திய மந்திரியாக இருந்தபோது முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக குரல் கொடுத்தாரா? இல்லை.

எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற கழக தொண்டர்கள் இரவு, பகல் பாராது களப்பணி ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story