‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ எச்.வசந்தகுமார் பிரசாரம்


‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ எச்.வசந்தகுமார் பிரசாரம்
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 9:13 PM GMT)

விவசாய கடன்களை தள்ளுபடி செய்திட கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பிரசாரம் செய்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் நேற்று மைலோடு சந்திப்பு பகுதியில் திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை கூட்டணி கட்சியினரும் குடும்பமாக ஒன்றிணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த தேர்தல் அறிக்கையானது, 2019-ம் ஆண்டு முதல் 2097-ம் ஆண்டு வரைக்கும் கொடுத்துள்ளனர். 2097-ம் ஆண்டு வரை தேர்தல் அறிக்கை கொடுத்த ஒரே கட்சி பா.ஜனதாதான். காங்கிரஸ் இயக்கம் மக்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்க இருக்கிறது.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து என எல்லாவிதமாகவும் மக்களோடு இருக்கிறதுதான் காங்கிரஸ் இயக்கம். விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறோம். பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்த சாதனை என்னவென்றால் இருக்கிற குளங்களை எல்லாம் மண்ணைப்போட்டு மூடி, காங்கிரீட் சாலையாக அமைத்து அதற்கு மேல் பாலம் போடுகிறேன் என்று சொல்கிறார்.

கடலுக்குள்ளேயே தூண்களைப் போட்டு பாதை அமைப்பதை போன்று குளங்களிலும் கூட தூண்களை நிறுவி பாலம் அமைத்திருக்க வேண்டும். விவசாயிகளை அழித்து, குடிநீர் இல்லாமல் ஆக்குகிற செயலைத்தான் பா.ஜனதா அரசாங்கம் செய்கிறது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார். ஒரு நபருக்குகூட பெற்றுத்தரவில்லை. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். யாருக்கும் வேலை தரவில்லை. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார். அதுவும் போடவில்லை.

எனவே காங்கிரஸ் கட்சி மட்டும்தான் சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் பாதுகாக்கிற இயக்கமாக இருக்கிறது. அத்தகைய காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எச்.வசந்தகுமார் பேசினார்.

பின்னர் அவர் பரம்பை, கண்ணோடு, கொக்கோடு, முரசங்கோடு, நெய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Next Story