மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் திடீர் தண்ணீர் திறப்பு: புதிதாக போடப்பட்ட தார் ரோடு அகற்றம்


மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் திடீர் தண்ணீர் திறப்பு: புதிதாக போடப்பட்ட தார் ரோடு அகற்றம்
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 9 April 2019 9:16 PM GMT)

மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அம்மாபேட்டை அருகே புதிதாக போடப்பட்ட தார் ரோடு அகற்றப்பட்டது.

அம்மாபேட்டை,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதியில் உள்ளவர்களின் குடிநீர் தேவைக்காக, திடீரென நேற்று இரவு 7 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை இன்று (புதன்கிழமை) மதியம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி அருகே செல்லும் மேட்டூர் வலதுகரை வாய்க்காலின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வாய்க்காலின் குறுக்கே மண் கொட்டப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக தார் ரோடு போடப்பட்டது.

இதற்கிடையே மேட்டூர் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திடீரென திறந்துவிடப்பட்டதால், அந்த வாய்க்காலின் குறுக்கே பூதப்பாடி அருகே புதிதாக போடப்பட்ட தார் ரோட்டை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று இரவோடு, இரவாக நடந்தது.

புதிதாக போடப்பட்ட தார் ரோடு 2 நாளில் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story